Friday, May 25, 2012

சில்மிச இரவுகள்


முடிச்சவிழ்ந்த கைலியின் இளகலில்
அவள் உள் நுழையும் கனவினில்
பின் இரவு கரையக் கண்டேன்
உக்கிர கோடையில் வழியும் அவள் வியர்வையில்
கமழும் நறுமண மலர்களின் வாசம்
நாசியின் அடிவரை நுழைந்து
இதயத்தின் இடம் வலம் தொடும்
சொப்பன சுந்தரியின் வனப்புகளில்
தாவித் திரியும் அவாவின் அலைவுகளில்
தொலைத்த வினாடிகளின் தொகுப்பே
எனது வாழ் காலத்தின் கணக்காகிறது
முன் மாலைப் பொழுதின் இரம்மிய அழகை
விழுங்கத் துடிக்கும் சர்ப்பத்தின் நாக்கில்
மேனகையின் மோகமுகம்
என்னைக் காமத்தின் சொர்க்கத்துள் தள்ளி விடுகிறது
சிலிர்த்தடர்ந்த பூஞ்சோலையாய்
அவள் உதிர்த்து விட்டுப்போன புன்னகையில்
மயிலிறகின் வருடல்
உடல் முழுதும் சில்மிச நடனம் புரிகிறது
இரவு கடந்து வெகு நேரமாகியும்
கலையாத அவள் முகம்
என் நினைவுக் குழியினுள்
கனவுகளைத் தேக்கியபடியே
புயல் கடந்துபோன தேகத்தின் அயர்ச்சியில்
மூர்ச்சையாகிக் கிடக்கிறது எனதுடல்.

No comments:

Post a Comment