Friday, May 25, 2012

நானென்பதும் அவளென்பதும்


என்றும் நீங்காது என் நினைவில்
நிறைந்திருக்கும் அவளே
என் உடலுக்குள்
உலாவிடும் உயிராவாள்.
துயரத்தில் என் கண்கள்
வடிக்கின்ற துளி கண்ணீரை
துடைக்கின்ற இருகரமும்
அவளே தான்.
முழு இன்பத்தில்
நான் சிரிக்கின்ற போதினில்
என் புன்னகைக்குள்
ஒளிர்கின்ற விரிகின்ற பூரிப்பும்
அவளே தான்.
என் இதயத்து
தசைகள் விரிந்தும் சுருங்கியும்
தருகின்ற ராகத்தின் சுருதிலயம்
அவளே தான்.
வீணையின் தந்தி தருகின்ற
நாதத்தில் அதிகாலை பொழுதொன்றில்
மழைதாங்கி மலர்திருக்கும்
அழகான ரோஜாவில்
மலைமூடி நிற்கும் புகையான முகிலில்
முகில்கூடி பொழியும் மாலைமழையில்
நான் பார்க்கும் அனைத்தும்
அவளாக இருக்கும் போதினில்
அவளென்றும் நானென்றும் பிரிவென்பதேது.
அவளுக்குள் கரைந்து
நானும் எனக்குள்ளே உருகி அவளும்
நானென்பதும் அவளென்பதும்
உருவங்கள் மட்டுமே.
உயிராகி ஒன்றுக்குள் ஒன்றானோம்

No comments:

Post a Comment