Tuesday, May 22, 2012

சுடிதார் உலகத்தில்


மூச்சுக்குள் சேமிப்பு
உன் புன்னகைகள்
ரவிவர்ம வண்ணங்களாய்
உன் பெயரடியாய்
காதல் உயிரடியாய் ...
சத்திரத் தெரு
முச்சந்திப் பிச்சைக்காரனாய்
என் காதலெனும் யாசகத்தில்
சில்லறைச் சிரிப்புச் சிதறல்கள்
விண் வரைந்த ஓவியமாய்
விரல் சேர்ந்த காவியமாய்
தொடரும் நடுக்கத்தில்
பதற்றத்தில் கூடவே
ஆண் வெட்கத்தில்...???
பூவையால்
என் இராத்திரிகள்
கூவைகள் அலறும்
இரவுகளாக்கப்பட்டு
கனவில் மட்டும்
காதல்ப் போதனை
பாவையின்
படிக்கப் படாத மனதை ....
சைவம் துறந்து
என் இதயம்
விழுங்கும் பெண்மையிடம்
சிக்கிக்கொண்டே
சிலிர்த்துக்கொண்டே
சுடிதார் உலகத்தில் நான் ...

No comments:

Post a Comment