Tuesday, May 22, 2012

ஒற்றைரோஜாவும் ஒரு இதயமும்


அன்று ஏடன் தோட்டத்திலும்
பின்னர் பாரசீகஅந்தப்புர பூங்காக்களிலும்
மொகலாய ராஜபாதைகளிலும்
பூத்துக்குலுங்கிய ரோஜாதான்
இன்று என் வீட்டு ஜன்னல்கரையிலும் பூத்திருக்கிறது.
ஏவாள் விரும்பிக் கேட்ட
அப்பிள் பழத்தை பறித்துகொடுத்த
ஆதாமின் நெஞ்சுக்குள்
துடித்துக்கொண்டிருந்ததும்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
வெற்றிப் புன்னகையுடன்
பாரசீகத்தெருக்களில் நடைபோட்ட
மகா அலெக்சாண்டரின்
இடப்பக்கத்து மார்புக்குள்
அடித்துக்கொண்டிருந்ததும்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.!
ராஜபுத்திர கோட்டைகளின் மேல்
வில்லுகளுடன் நின்றிருந்த வீரர்களின்
காதலை சொல்லிக்கொண்டிருந்ததும்
இன்று உனக்காகவே எனக்குள்
உருகிக் கொண்டிருப்பதும் ஒரே இதயம்தான்.! .

தேர்திருவிழாவின் அத்தனை கூட்டத்துக்குள்ளும்
நீமட்டும் எனக்கு தெரிவதுபோலவே..
எத்தனை பூக்கூட்டத்துள்ளும் ஒரு ஒற்றை ரோஜா
தனித்தே தெரியுமே அதைப்போலவே
என் காதலை சொல்லியபடி விரிந்திருக்கும்
இந்த ஒற்றை ரோஜாவும்
உனக்காகவே ஏங்கிக்கிடக்கும் என் இதயமும்
எல்லாவற்றையும் விட மேன்மையானவை
ஏனென்றால் அவை உனக்கானவை.

No comments:

Post a Comment